Saturday 16 September 2017

THANTHAI PERIYAR


தந்தை பெரியார் 





கேரளாவில் வைக்கம் போராட்டம் ஈழவர்களுக்கும் புலையர்களுக்கும் அவர்களுடைய உரிமைகளை பெற்று தர தந்தை பெரியாரால்  நடத்தப்பட்டது. காலில் விலங்கு, கழுத்திலே தொங்கும் கைதி எண் எழுதிய மரப் பலகை, தலையில் தொப்பியுடன் கேரளா திருவனந்தபுரம் சிறையில் பெரியார்.  அந்த சமயம் ஜெயிலில் இருக்கும் அவருக்கு வாணவேடிக்கைகளும் வெடி சத்தமும் கேட்க விசாரித்த போது திருவாங்கூர் மகாராஜா இறந்துவிட்டார் என்று தெரிந்து கொண்டார்.  மகாராஜா இறந்ததை திருநாடு புகுந்துவிட்டார் என கூறுவதோடு அதை துக்கமாக இல்லாமல், மகிழ்வாக கொண்டாடும் பழக்கம் கேரளாவில் இருந்தது.  அதன் பின் ராணி ஆட்சியில் அமர்ந்தார்.  ராணி இந்த சாதி பிரச்சினை வளர்வதை விரும்பாததால் அப்போது இருந்த திவானிடம் கூற , திவான் ராகவையா என்பவர் ராஜாஜிக்கு கொஞ்சம் தெரிந்தவர் என்பதால், பெரியார் பிரச்சினையை சுமுகமாக பேசி பெரியாரை விடுதலை செய்யலாம் என ராஜாஜியை அணுகிய போது, ராஜாஜி காந்திஜியை அழைத்து திருவனந்தபுரம் சென்று ராணியிடமும் சிறையில் இருந்த பெரியாரிடமும் பேசி ஈழவர்களும், புலையர்களும் தெருக்களில் செல்லலாம் என்ற ராணியின் உத்தரவை பெற்று அதன்பின் பெரியார் சிறையிலிருந்து வெளியே வந்தார். 

காமராஜர் மீது காட்டிய பரிவு

11 நவம்பர் 1966 அன்று டெல்லியில் பசு வதையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த ஜனசங்கம், ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் காமராஜரின் வீட்டை சூழ்ந்து நெருப்பு வைத்தனர்.  காமராஜர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்தார் பெரியார். 
மானம், ரோசம், சூடு, சொரணை அற்ற இந்த நாட்டில் இந்த விஷயங்களை கூட சரிவர பிரசுரிப்பதற்கு தமிழனுக்கு பிறந்த தமிழினப் பத்திரிகைகள் ஓன்று கூட முன் வரவில்லையே என வருத்தத்தை வெளியிட்ட பெரியார் இறுதியில் கத்தி வைத்து கொள்ளுங்கள் .  காமராஜரை பாதுகாருங்கள்.  மறுபடியும் எழுத இடம் வைத்து கொள்ளாதீர்கள் என்று எச்சரித்திருந்தார் (விடுதலை 13.11.1966)

அகிம்சை வழியில் போராட்டம்

இந்தியா திருநாட்டில் பெரியாருக்கிணையான வேறு தலைவர்கள் யாரும் இல்லை எனலாம்.  இறுதிவரை அரசு பதவிக்கு ஆசை படாமல், தேர்தலில் போட்டியிடாமல் சமூக நீதிக்காக மட்டும்  தனது  வாழ்நாளை கழித்தவர்.  மகாத்மா அகிம்சையை வலியுறுத்தினர்  என்றால் இவர் சொல்லாமலே அகிம்சையை கடை பிடித்தார்.  ஒரு போராட்டம் கூட அகிம்சைக்கு எதிராக செய்ததில்லை.  கடவுள் மறுப்பு போராட்டம் என்றாலும் கடையில் வாங்கிய பிள்ளையாரை வீதியில் உடைப்பார்களே அல்லாமல், பாபர் மசூதியை இடித்தது போல் கோவிலுக்கு சென்று கடவுள் சிலைகளை உடைக்க போராட்டம் நடத்தியதில்லை.

நான் கண்ட பெரியார் 


 எனக்கு திருநெல்வேலி ஜங்ஷனில்இப்போது பேரின்ப விலாஸ் திரையரங்கு இருக்கும் இடத்தில் பெரியார் பேசிய கூட்டத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மணியம்மை உடனிருந்தார். பெரிய  நாய் ஓன்று அவர் அமர்ந்திருந்த கட்டிலுக்கு அடியில். கட்டிலில் இருந்தபடியே பேசினார்.  எதற்கும் பயப்படாமல் பேசுகிறார்.  தியாகத்தின் திருஉருவம்.  தனது உடல் உபாதைகளை கூட பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் சுற்றி யாரும் செய்யாத சமுதாய பணிகளை செய்தார். 

தமிழ் எழுத்து சீர்திருத்தம்

தமிழ் எழுத்துக்களில் தனது  விடுதலை பத்திரிகையில் எழுதியதன் மூலம் சீர்திருத்தம் கொண்டு வந்தார்.  எம்ஜியார் அவர்கள் முதல்வராக இருக்கும் போது அரசாணை மூலம் அவற்றை கடை பிடிக்க வைத்தார்.
அவரது இறப்பின் பொது திரு குமரி அனந்தன் அவர்கள் ரேடியோவில் பேசியதை நான் கேட்டேன்.  பெரியார் ஒரு வண்ணன். சமுதாயத்தில் உள்ள அழுகுகளை நீங்கியதால் என பேசினார். 

கவிஞரின் கவிதை மழை

முத்தாய்ப்பாக பெரியார் நினைவாக கவிஞர் கண்ணதாசன் அவர்கள் என்றும் நிலைத்திருக்கும் அவரது புகழை பற்றி கீழ்கண்ட கவிதை மூலம்  கூறி விட்டார்.
“ ஊன்றி வரும் தடி சற்று நடுங்கக்கூடும்

உள்ளத்தின் உரத்திலே  நடுக்கமில்லை

தோன்றவரும் வடிவினிலே நடுக்கம் தோன்றும்

துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை

வான் தவழும் வெண் மேக தாடி ஆடும்

வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை

ஆன்றவிந்த பெரியாருக்கு பெரியார்

எங்கள் ஐயாவிற்கு இணை மற்றோர் எவரும் இல்லை

நீதி மன்ற நீதிக்கும் நீதி சொல்வார்

நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்தி வைப்பார்

சாதி என்னும் நாகத்தை தாக்கி தாக்கி

சாகடித்து பெருமை அவர் தடிக்கே உண்டு

நாதியில்லார் நாதி பெற நாற்படைத்தார் 

நாற்பத்தி ஐங்கோடி மக்களுக்கும்

பேதமில்லா வாழ்வு தர பிறந்து வந்தார்

பிறப்பினிலே பெரியாராய் தான் பிறந்தார்

ஆக்காத நூல் இல்லை : ஆய்ந்து

தேர்ந்து அழிக்காத  கருத்தில்லை

அழுத்தமாக தாக்காத பழமையையில்லை

தந்தை நெஞ்சில் தழைக்காத உவமையில்லை

தமிழ் நிலத்தில் நீக்காத களையில்லை

நினைத்து சொல்லி நிலைக்காத பொருளில்லை

நீதிகூட காக்காத உலகத்தை பெரியார் காத்தார்

கருணை மழை மேகத்தை காலம் காக்கும் “